விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (Dalit Panthers or Viduthalai Siruthikal katchi) தமிழ்நாட்டு மாநில அரசியல் கட்சி ஆகும். இது 1970களில் மகாராட்டிர மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தலித்து சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டிலும் தலித்து சிறுத்தைகள் இயக்கம் என்ற பெயரிலேயே மலைச்சாமி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. மலைச்சாமி செப்டம்பர் 1989 தான் இறக்கும் வரை இதன் மாநிலத்தலைவராக இருந்தார்.[1] இக்கட்சி தலித் மக்களின் பிரச்சினைகளை பெரும்பாலும் முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடி செயல்படுகின்றது. தலித் சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்ட பொழுது, மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல். திருமாவளவன் மதுரையில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தொல். திருமாவளவன் அதன் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் என பெயர் மாற்றிய தொல்.திருமாவளவன், நீலம், சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அவ்வியக்கத்திற்கு என வடிவமைத்து 1990 ஆம் ஆண்டில் ஏப்ரல் 14 ஆம் நாளில் மதுரையில் ஏற்றினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தலில் ஈடுபட முடிவு செய்த பொழுது, 1999 ஆம் ஆண்டு ஆகத்து 17 ஆம் நாள் தொல். திருமாவளவன் அரசு வேலையைத் துறந்தார்.